இந்தியா

போதையில் வந்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வர்? வைரலாக பரவும் தகவல்

Published On 2022-09-19 16:16 GMT   |   Update On 2022-09-19 16:16 GMT
  • பகவந்த் மானின் இந்த நடத்தை பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்
  • அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம்

சண்டிகர்:

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் சமீபத்தில் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் பயணிக்க இருந்ததால், அவருக்காக விமானம் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், பின்னர் தள்ளாடியபடி அவர் விமானத்தில் ஏறியதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் இறக்கவிடப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகி உள்ளன.

இந்த தகவல் குறித்து ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் டுவிட்டரில் பதிவிட்டு, பஞ்சாப் மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், பகவந்த் மானின் இந்த நடத்தை, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

"முதல்வர் பகவந்த் மான் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்றும், அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் பயணி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த தகவல் வதந்தி என்றும், பிராங்பர்ட் விமான நிலையத்தில் பகவந்த் மான் இறக்கிவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வரால் விமானத்தில் ஏற முடியவில்லை என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News