ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடியிடம் ஆதரவு கேட்ட யஷ்வந்த் சின்கா
- ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி ஆகியோரிடம் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
- எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதிய யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி :
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளை தொடங்கி விட்டார்.
அந்தவகையில் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதரவை கேட்டுக்கொண்டார். அத்துடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதா மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய யஷ்வந்த் சின்கா, தன்னை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்தபோது அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதிமொழியை நினைவுபடுத்தினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை முறைப்படி கேட்டுக்கொண்டார்.