இந்தியா

4 நாள் பயணமாக இன்று கேரளா வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2025-10-21 08:25 IST   |   Update On 2025-10-21 08:25:00 IST
  • வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார்.
  • கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

திருவனந்தபுரம்:

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 17-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

பின்னர் 23-ந்தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந்தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News