பாராளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை
- காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
- கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக பாராளுமன்றம் கூடுவதால் அதுகுறித்த நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் டிரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம், பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.