இந்தியா

ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100 பேர் பாதிப்பு- விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள அமைச்சர்

Published On 2023-01-01 17:22 GMT   |   Update On 2023-01-01 17:22 GMT
  • உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  • உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா:

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், கீழ்வைப்பூர் அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், ஏராளமானோ கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. அந்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100 நபர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கேட்டரிங் நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா பகுதியில் அதே நாளில் வேறு இரண்டு இடங்களில் உணவு வழங்கியதாகவும், இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் கேட்டரிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

Tags:    

Similar News