NDA-க்கு சரிவு... பிரதமர் மோடிக்கு நீடிக்கும் மக்கள் செல்வாக்கு - கருத்துக்கணிப்பில் தகவல்
- கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர்.
- பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல் திறன் மற்றும் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 788 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது மோடியின் செல்வாக்கில் சிறிய சரிவு இருப்பதை காட்டினாலும், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகும் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்கு இருப்பதையும், அவருக்கு மக்கள் மத்தியில் நீடித்த அங்கீகாரத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இதை போல கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 34.2 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் 3-வது பதவி காலத்தில் அவரது செயல் திறன் இதுவரை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக 36.1 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது இந்த முறை மோடியின் செயல் திறன் சற்று சரிவை காட்டுகிறது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பிரதமர் மோடியின் செயல் திறன் சராசரி என்று 12.7 சதவீதம் பேரும், மோசம் என்று 12.6 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என்று 13.8 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக்கணிப்பில் இது 54.2 சதவீதமாக குறைந்துள்ளது.