இந்தியா

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டு ஜெயில்

Published On 2022-12-10 04:33 GMT   |   Update On 2022-12-10 04:33 GMT
  • சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தார்.

இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளிக்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும். அதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.

இதில் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் நாயர் (வயது 64) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவீந்திரன் நாயரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது.

ரவீந்திரன் நாயர் மீதான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News