இந்தியா
null

மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

Published On 2024-01-15 05:47 GMT   |   Update On 2024-01-15 05:47 GMT
  • பாதுகாப்பு பணிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.
  • மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 18-ம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதியதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைந்தது.

மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க சபரிமலையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு பணிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.

மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு மலையில் இருந்து இறங்கும் பக்தர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க சரியான வெளியேறும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றும், மகரஜோதியை காண பக்தர்கள் கூடும் இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஐயப்பனுக்கான திருவாபரண பெட்டிகள் கொண்டு செல்வதற்கு வசதியாக இன்று காலை 10 மணி முதல் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 18-ம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News