கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்
- கப்பலில் 40 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.