இந்தியா

ஆந்திராவில் மனைவி கண்முன்னே மின்னல் தாக்கி கணவன் பலி

Published On 2023-04-23 06:07 GMT   |   Update On 2023-04-23 06:07 GMT
  • மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
  • பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயாநகர மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 47). கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமணம்மா. கணவன், மனைவி இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

நேற்று காலை வேலைக்கு சென்றனர். மதியம் கணவன், மனைவி இருவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசியது.

பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.

அப்போது அப்பா ராவ் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது மனைவி கதறி துடித்தார்.

மற்றொரு சம்பவம்...

அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் போடுராஜூ குன்னாலு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாயுடு (51). இவர் கிராமத்துக்கு அருகில் உள்ள மலை உச்சிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.

காற்றில் வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

Tags:    

Similar News