இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 3,632 பேர் மனு தாக்கல்

Published On 2023-04-21 08:02 IST   |   Update On 2023-04-21 08:02:00 IST
  • இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
  • மனுக்களை வாபஸ் பெற 24-ந்தேதி கடைசி நாள்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. ஏராளமானவர்கள் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

கா்நாடகத்தில் ஒட்டுமொத்த மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பா.ஜனதா சார்பில் 707 மனுக்களும், காங்கிரஸ் சார்பில் 651 மனுக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 455 மனுக்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 373 மனுக்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 179 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளன.

இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். ஒட்டுமொத்தமாக 1,720 சுயேச்சைகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 1,007 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. இதில் சட்டப்படி நிரப்பப்பட்டுள்ள மனுக்கள் ஏற்று கொள்ளப்படும். விதிகளுக்கு உட்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.

Tags:    

Similar News