இந்தியா

ஐ.என்.எஸ். இம்பால் போர் கப்பலின் பரிசோதனை வெற்றி: இந்திய கடற்படை

Published On 2023-11-22 16:12 IST   |   Update On 2023-11-22 18:07:00 IST
  • 7400 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். போர்கப்பல் 164 மீட்டர் நீளம் கொண்டது
  • பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம் செல்ல கூடியவை

இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையை சேர்ந்தது.

மணிக்கு சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய இக்கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 7400 டன் எடை கொண்ட இம்பால் போர் கப்பலில் இருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.

இக்கப்பலை இவ்வருட இறுதியிலோ அல்லது 2024 தொடக்கத்திலோ நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கப்பலின் திறன் குறித்து பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அதில் ஒன்றாக இன்று, அக்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை (BrahMos missile) செலுத்தும் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டது.

இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

கடந்த 2001 ஜூன் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 2005ல் இருந்து இந்திய ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கான செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ரஷிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் பயணித்து, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

Tags:    

Similar News