இந்தியா

டிரம்மில் கணவனின் சிதைந்த உடல்.. காணாமல் போன மனைவி, குழந்தைகள் - ராஜஸ்தானில் திடுக்

Published On 2025-08-18 23:36 IST   |   Update On 2025-08-18 23:36:00 IST
  • தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
  • மொட்டை மாடிக்குச் சென்றபோது, கடுமையான துர்நாற்றம் வீசியது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹன்ஸ் ராஜ், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஹன்ஸ் ராஜ் உள்ளூர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இருப்பினும், சிறிது காலமாக வீட்டில் யாரையும் காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை மொட்டை மாடிக்குச் சென்றபோது, கடுமையான துர்நாற்றம் வீசியது.

உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். மொட்டை மாடியில் உள்ள டிரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கவனித்த போலீசார், டிரம்மைத் திறந்து உடலைக் கண்டுபிடித்தனர்.

சிதைந்த உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹன்ஸ் ராஜ் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் காணாமல் போன அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News