இந்தியா

#Murder காப்பீடு பணத்திற்காக ஆட்டோ டிரைவரை கார் ஏற்றி கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்

Published On 2026-03-09 15:01 IST   |   Update On 2026-03-09 15:01:00 IST
  • மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
  • ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

தெலுங்கானா மாநிலம், கம்மம், காந்தி நகரை சேர்ந்தவர் ரவி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரசாந்தி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவி மது போதைக்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ரவி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் ரவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணவர் விரைவில் இறந்து விடுவார் என கருதிய மனைவி கணவர் பெயரில் காப்பீடு செய்தார். காப்பீடு எடுத்து ஒரு ஆண்டு ஆகியும் ரவி இறக்கவில்லை. இதனால் காப்பீட்டு பணத்தை பெற கணவரை கொலை செய்ய பிரசாந்தி முடிவு செய்தார்.

அதன்படி ரவியின் உறவினரான சீனிவாஸ் அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை அணுகினார். அவர்களும் ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2-ஆம் தேதி இரவு ரவியை அவரது ஆட்டோவில் கம்பம்-குரவி சாலையில் உள்ள எம்.பி. பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரவியை மது குடிக்க வைத்தனர். மது போதை தலைக்கு ஏறிய ரவி சாலையில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.

அப்போது ராஜ்குமார் தனக்கு சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்து ரவி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரவியின் பிணத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரவி சாலை விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரவியின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தில் பேரில் பிரசாந்தியை பிடித்து விசாரணை செய்த போது காப்பீட்டு பணத்திற்காக காரை ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரசாந்தி, ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News