இந்தியா

சுரங்கப்பாதை விபத்து: 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்- சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, ஆக்ஸிஜன் வழங்க முயற்சி

Published On 2023-11-13 11:14 IST   |   Update On 2023-11-13 11:14:00 IST
  • தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா- தண்டல்ஹன் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை இந்த சுரங்கப்பாதையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சுரங்க பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தொடக்க பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதனால் சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மேலும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

இடிபாடுகள் அதிக அளவில் இருப்பதால் மீட்பு பணிகளில் கடும் சிரமம் நிலவுகிறது. இதனால் 15 மணிநேரத்திற்கு மேலாகியும் நேற்று வரை ஒரு தொழிலாளரை கூட மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜே.சி.பி., துளையிடும் கருவிகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உத்தர்காசி கலெக்டர் அபிஷேக் ருஹேலா மேற்பார்வையிட்டு வருகிறார்.

மீட்பு பணிகள் தொடர்பாக அவருடன் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி பேசி உள்ளார்.

மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், "சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News