இந்தியா

இலவச அறிவிப்புகள் விவகாரம்... நிபுணர் குழுவில் இடம்பெற தேர்தல் ஆணையம் மறுப்பு

Published On 2022-08-10 16:09 GMT   |   Update On 2022-08-10 16:09 GMT
  • மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • தற்போதுள்ள சட்டதிட்ட விதிகளைக் கொண்டு இலவச திட்டங்களை வரையறுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கருத்து

புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

தேர்தல் பிரசாரங்களின் போது இலவசங்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிதி ஆயோக், சட்ட ஆணையம், ரிசர்வ் வங்கி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போன்ற பல்வேறு தரப்பினரைக் கொண்ட நிபுணர் குழு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அத்தகைய அமைப்பை உருவாக்குவது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க ஏதுவாக, மனுதாரர், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மனுவில் உள்ள விவகாரம் தீவிரமானது என்று கூறிய தலைமை நீதிபதி என்வி ரமணா, தேர்தல் ஆணையம் மற்றும் அரசு எதுவும் செய்ய முடியாது என்று கூறி ஒதுங்கிவிட முடியாது என்றார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போதுள்ள சட்டதிட்ட விதிகளைக் கொண்டு இலவச திட்டங்களை வரையறுக்க முடியாது என்றும், இலவச திட்ட அறிவிப்புகள் சமூக பொருளாதார ரீதியாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இலவச அறிவிப்புகள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும் நிபுணர் குழுவில் தேர்தல் ஆணையம் இடம் பெற மறுத்துவிட்டது.

Tags:    

Similar News