மும்பை விமான நிலையத்தில் ரூ.7¾ கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த பயணி கைது
- அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கடந்த 13-ந்தேதி இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும். இது குறித்து உகாண்டா நாட்டை சேர்ந்த பயணியை கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.