இந்தியா

குடும்ப தகராறில் மகன்-பேரனை உயிரோடு எரித்துக்கொன்று விஷம் குடித்தவர் உயிரிழப்பு

Published On 2023-09-22 06:13 GMT   |   Update On 2023-09-22 06:13 GMT
  • சொத்து பிரிப்பது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
  • வீட்டின் மாடியில் மயங்கி கிடந்த ஜான்சனை போலீசார் மீட்டு, திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி அருகே உள்ள சிரக்காக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மகன் ஜோஜி(40) குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக அவருக்கும், மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

அது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஜான்சன், அறையில் படுத்து தூங்கிய தனது மகன் ஜோஜி, மருமகள் லிஜி (34), பேரன் டெண்டுல்கர்(12) ஆகியோரை அறையில் வைத்து பூட்டி பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் அவர்கள் ஜோஜி உள்ளிட்ட 3 பேரும் உடல் கருகினர். அவர்களில் ஜோஜி, டெண்டுல்கர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மகன் குடும்பத்தினரை உயிரோடு தீவைத்து எரித்த ஜான்சன் விஷம் குடித்தார். வீட்டின் மாடியில் மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு, திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மகன் குடும்பத்தை உயிரோடு எரித்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஜான்சன், தீ வைத்ததில் படுகாயமடைந்த அவரது மருமகள் லிஜி ஆகிய இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான்சன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மருமகள் லிஜி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News