இந்தியா

"கொடூர மன உளைச்சலுக்கு ஷிகர் ஆளாகியுள்ளார்": விவாகரத்து வழங்கிய நீதிபதி கருத்து

Published On 2023-10-05 11:44 GMT   |   Update On 2023-10-05 11:45 GMT
  • கிரிக்கெட்டில் ஈடுபட்டதால் ஷிகர் ஆஸ்திரேலியா செல்ல இயலவில்லை
  • ஷிகர் தவானுக்கு எதிராக எந்த ஆதாரமும் ஆயிஷா தரப்பில் தர முடியவில்லை

இந்திய கிரிக்கெட் விளையாட்டில் புகழ் பெற்ற தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்.

இவர் 2012ல் ஆயிஷா முகர்ஜி எனும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு 10 வயது மகன் உள்ளார். ஆயிஷா முன்னரே திருமணமானவர். அவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். முதல் திருமணத்தின் வழியாக ஆயிஷாவிற்கு 2 மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு இந்தியாவிற்காக விளையாடி வந்ததால் ஷிகர், ஆஸ்திரேலியா செல்ல இயலவில்லை.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஆயிஷா, இந்தியாவிற்கு வந்து விட்டால் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது 2 மகள்களின் மீதான பராமரிப்பு உரிமையை இழக்க நேரிடும் என்பதால் ஷிகர் தவானை திருமணம் செய்து கொள்ளும் போது இந்தியாவிற்கே வந்து விடுவதாக உறுதியளித்தவர் திருமணம் ஆன பிறகு வரவில்லை.

ஷிகர் ஆஸ்திரேலியாவில் வாங்கிய 3 சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றும்படி ஆயிஷா வற்புறுத்தியதால், ஷிகர் அவ்வாறே செய்ய வேண்டியதாகியது.

தனது முதல் கணவரிடமிருந்து 2 மகள்களையும் பராமரிக்கும் செலவிற்கான பணத்தை பெற்று கொண்டு வந்த ஆயிஷா, 2 மகள்களுக்கான பராமரிப்பு செலவுக்காக ஒரு தொகையை ஷிகரிடமிருந்தும் பெற்று வந்தார்.

இந்த காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஷிகர் தவான், புது டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஆயிஷாவிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்தார்.

நேற்று இந்த வழக்கில் ஷிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

அதில் நீதிபதி ஹரிஷ் குமார் கூறியுள்ளதாவது:

சேர்ந்து வாழ மறுக்கும் மனைவியால் ஷிகருக்கு ஏற்பட்டுள்ள கொடூர மன உளைச்சலை புரிந்து கொள்ள முடிகிறது. சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு குறித்தும் ஷிகரின் வாதங்களுக்கு எதிராக ஆயிஷா தரப்பிலிருந்து எந்த வாதமோ, ஆதாரமோ வைக்கப்படவில்லை. எனவே எந்த குற்றமும் செய்யாமல் மன வேதனைக்கு ஆளாகியுள்ள ஷிகருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News