ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்- 18 பேர் பதவியேற்பு
- மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
- பாஜகவில் இருந்து 9 பேர், சிவசேனா சார்பில் 9 பேர் பதவியேற்றனர்
மும்பை:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை, அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர்.
இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சார்பில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். சிவசேனா சார்பில் 9 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.