அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேர்தல் ஆணையம்
- பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
- தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெறவேண்டும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சான்றிதழ் பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட, எதிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வேட்பாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.