டெல்லி அரசியலில் திடீர் பரபரப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் கெஜ்ரிவால்
- அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என கெஜ்ரிவால் கூறிவருகிறார்.
- அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.
டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 8 இடங்களும் உள்ளன.
தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வந்தாலும் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன் அனுப்பி 19-ம் தேதி ஆஜராகுமாறு கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்யலாம் என கெஜ்ரிவால் கூறிவரும் நிலையில் , நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.