திரிபுராசட்டசபையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்த பா.ஜனதா எம்.எல்.ஏ.
- திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.
அகர்தலா :
திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வருகிறது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என்று சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.
இதற்கிடையே, தனக்கு திரும்ப திரும்ப செல்போனில் அழைப்பு வந்ததால், அதை எடுத்து பேசியபோது, தானாகவே ஆபாச வீடியோ ஓடத்தொடங்கியதாகவும், அதை உடனே அணைத்து விட்டதாகவும் ஜடாப் லால் நாத் விளக்கம் அளித்துள்ளார்.