இந்தியா

ஆந்திர தம்பதி மகன், மகளுடன் மாயம்- கும்பமேளாவில் தற்கொலை செய்வோம் என கடிதத்தால் பரபரப்பு

Published On 2025-02-06 10:28 IST   |   Update On 2025-02-06 10:28:00 IST
  • குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சகினேடிபள்ளி மண்டலம் அந்தர் வேதிபலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 43). இவருடைய மனைவி கங்கா பவானி ( 35) தம்பதியின் மகள் தேவக்னா (6) மகன் மாதவ் (4).

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீனு மனைவி குழந்தைகளுடன் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு செல்வதாக கூறிவிட்டு பைக்கில் அவர்களை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் அவருடைய தம்பி புல்லையா என்பவர் ஸ்ரீனு வீட்டிற்கு சென்றார்.

அங்கு ஸ்ரீனு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நாங்கள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் கும்பமேளா நடைபெறும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என எழுதப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புல்லையா இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் பிரயாக்ராஜ் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுவரை குழந்தைகளுடன் மாயமான தம்பதி என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News