இந்தியா

தாராவி குடிசைப்பகுதியின் தோற்றம்.

மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும்: குடிசைப்பகுதி மக்கள் கவலை

Published On 2022-12-01 03:08 GMT   |   Update On 2022-12-01 03:30 GMT
  • சீரமைப்பு திட்டப்பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
  • தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

மும்பை :

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும். ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர்.

மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.

இந்தநிலையில் அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய சீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது.

பின்னர் ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அரசு, தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வே நிர்வாகம் நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியது. கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அடுத்த சில நாட்களில் தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலத்தை ஒப்படைத்தது.

இந்தநிலையில் ரூ.20 ஆயிரம் கோடியில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒருபகுதியாக சீரமைப்பு திட்டத்திற்கான டெண்டர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில் ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு அதானி குழுமம் டெண்டரை எடுத்துள்ளது. இதன் மூலம் தாராவி சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாராவி அடுக்குமாடிகளாக எழப்போகிறது.

இருப்பினும் சீரமைப்பு திட்டத்துக்கு தாராவி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள ஏராளமான சிறுதொழில்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது ஒரு வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் கூட வசிப்பதால், அவர்கள் அனைவருக்கும் சீரமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் தாராவி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம் என்பதால், இது சர்வதேச அடையாளத்தை இழக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News