அமைதியாக நடந்த 4 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: நிலாம்பூரில் 73.26 சதவீதம் வாக்குப்பதிவு
- கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் 73.26 சதவீத வாக்குகள் பதிவானது.
- பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
புதுடெல்லி:
குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதன்படி, குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது.
இவற்றில் ஒரு சில மையங்களை தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், நிலாம்பூர் தொகுதியில் அதிக அளவாக 73.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளில் முறையே 56.89 மற்றும் 57.90 சதவீத வாக்குகளும், பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் 51.33 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.