இந்தியா
ஹெராயின்

உத்தரபிரதேசத்தில் ரூ.775 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Published On 2022-05-03 06:45 GMT   |   Update On 2022-05-03 06:45 GMT
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஹைதர்னாகதியின் உறவினர் வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை போலீசார் கைப்பற்றினார்கள்.
லக்னோ:

குஜராத் கடற்கரையில் கடந்த மாதம் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஹைதர் னாகதி என்பவரும கைது செய்யப்பட்டார்.

கைதான ஹைதர் னாகதி உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசாருடன் இணைந்து குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு படை போலீசார் நேற்று உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஹைதர்னாகதியின் உறவினர் வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை கைப்பற்றினார்கள். இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 775 கோடி ஆகும்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர்தான் போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து அழைத்து வர சட்டரீதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே ஐதராபாத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள ‘கோகெய்ன்’ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News