இந்தியா
உமர் அப்துல்லா

‘காஷ்மீர் பைல்ஸ்’ படம் வெறும் கட்டுக்கதை: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

Published On 2022-03-19 02:52 GMT   |   Update On 2022-03-19 02:52 GMT
இந்த படத்தை எடுத்தவர்கள், காஷ்மீரிகள் அனைவரும் அடிப்படைவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் பக்கம் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
ஸ்ரீநகர் :

காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா பங்கேற்றார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம், ஆவணப்படமாக இருந்தால், அது வேறு விஷயம். ஆனால், உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது என்று படக்குழு கூறியுள்ளது. இருப்பினும், படம் முற்றிலும் பொய்களால் நிறைந்துள்ளது. கட்டுக்கதையாக உள்ளது.

பரூக் அப்துல்லா ஆட்சியின்போது, காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதாக காட்டி இருப்பதுதான் மிகப்பெரிய பொய். அது, கவர்னர் ஆட்சியில், ஜக்மோகன் கவர்னராக இருந்தபோது நடந்தது. மத்தியில் பா.ஜனதா ஆதரவுடன் நடந்த வி.பி.சிங் ஆட்சியின்போது நடந்தது.

இந்த படத்தை எடுத்தவர்கள், காஷ்மீரிகள் அனைவரும் அடிப்படைவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் பக்கம் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News