இந்தியா
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரியை எரித்து கொன்ற இளம்பெண்

கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரியை எரித்து கொன்ற இளம்பெண்

Published On 2021-12-31 11:35 IST   |   Update On 2021-12-31 11:35:00 IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சகோதரியை தங்கையே எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி வடபாரூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்மயா (வயது 25).

விஸ்மயாவின் சகோதரி ஜித்து (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் விஸ்மயாவும், அவரது சகோதரி ஜித்துவும் இருந்தனர். பெற்றோர் வெளியே சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஜித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். வீட்டுக்குள் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். வீட்டுக்குள் விஸ்மயா கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் விஸ்மயா எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வடபாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜித்து ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், அதனை தெரிந்து கொண்ட விஸ்மயா, சகோதரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜித்து, சகோதரியை எரித்து கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தப்பியோடிய ஜித்துவை போலீசார் அவரது செல்போன் சிக்னல் மூலமாக தேடினர். இதில் அவர் காக்கநாடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று ஜித்துவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News