இந்தியா
நடிகை ஐஸ்வர்யா ராய்

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகை ஐஸ்வர்யா ராய்

Published On 2021-12-20 20:05 IST   |   Update On 2021-12-20 20:05:00 IST
மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் இந்தியாவை சேர்ந்த அரசியல் சினிமா, தொழில், மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. 

பிரிட்டனுக்கு சொந்தமான வெர்ஜியன் தீவில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் அமிதாப்பின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் தமக்கு கால அவகாசம் கோரியதுடன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  



இந்நிலையில் மூன்றாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரான ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்தார். அந்த விபரத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News