செய்திகள்
நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
நாக்பூர் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நாக்பூர்:
பெங்களூருவில் இருந்து இன்று காலை பாட்னா நோக்கி கோ பர்ஸ்ட் பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 139 பயணிகள் பயணம் செய்தனர். விமானம், காலை 11.15 மணியளவில் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. அங்கு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
அனுமதி கிடைத்ததையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட விமானத்தை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.