செய்திகள்
நீதிபதி ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் -தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2021-11-25 07:07 GMT   |   Update On 2021-11-25 07:07 GMT
உணவுக் கூடம் அளவுக்குக் கூட இல்லாத இடத்தில் ஆறுமுகசாமி ஆணையம் இயங்குவதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை தொடர்பான அப்பல்லோ மருத்துவமனையின் அச்சம் தேவையற்றது என்றும், ஆணையம் அதன் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் கூறினார்.

ஆணையத்தில் மருத்துவ வல்லுநர் குழு இடம்பெறாததால் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கு ஆட்சேபம் இல்லை என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உணவுக் கூடம் அளவுக்குக் கூட இல்லாத இடத்தில் ஆறுமுகசாமி ஆணையம் இயங்குவதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
Tags:    

Similar News