செய்திகள்
சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து- அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பிய ஐகோர்ட்
அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை நீட்டிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மும்பை:
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்த அதிகாரிகள், நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த விடுமுறைக்கால சிறப்பு அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ததுடன், அனில் தேஷ்முக்கை நவம்பர் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது