செய்திகள்
உத்தவ் தாக்கரே

பாஜகவுடன் கூட்டணி சேர வலியுறுத்தல்: உத்தவ் தாக்கரேக்கு சிவசேனா எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்

Published On 2021-06-21 02:56 GMT   |   Update On 2021-06-21 02:56 GMT
காங்கிரஸ் அடுத்த தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து பேசிவருகிறது. தேசியவாத காங்கிரஸ் சிவசேனா தொண்டர்களை அவர்கள் பக்கம் இழுத்து வருவதில் தீவிரமாக உள்ளது.
மும்பை :

மராட்டியத்தில் 25 ஆண்டுகால சிவசேனா- பா.ஜனதா கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலால் முறிந்தது.

அதன்பிறகு சிவசேனா, கொள்கைகள் முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்தநிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி அசோக் சவான் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களுடன் சந்திக்க சென்றார். அப்போது பிரதமர் மோடி உத்தவ் தாக்கரேயை மட்டும் தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வரும் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சை நேற்று முன்தினம் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையான வார்த்தைகளால் கண்டித்து இருந்தார்.

இந்தநிலையில் பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வலியுறுத்தி தானேயை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மும்பை, தானே உள்பட மாநிலத்தின் முக்கிய மாநகராட்சிகளில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் காங்கிரஸ் அடுத்த தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து பேசிவருகிறது. தேசியவாத காங்கிரஸ்
சிவசேனா
தொண்டர்களை அவர்கள் பக்கம் இழுத்து வருவதில் தீவிரமாக உள்ளது.

சிவசேனாவின் தரநிலைகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பிளவை ஏற்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மட்டும் வேலைகள் நடப்பதாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உணருகின்றனர். காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கட்சியை வளர்ப்பதற்காகவா சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்தது என கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

சிவசேனா - பா.ஜனதா மகாயுக்தி கூட்டணி பிரிந்த போதும், இருகட்சிகள் இடையேயான தலைவர்கள் இடையே உணர்வு பூர்வமான, தனிப்பட்ட உறவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. காலம் சென்ற பிறகு யோசிப்பதைவிட, தற்போது பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்வது நல்லது. கர்ணன், அபிமன்யு போல ஒருவரை தியாகம் செய்வதை விட, அர்ஜூனனை போல போர் புரிவதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனால் தான் நமது அரசிடமோ அல்லது தலைவர்களிடம் இருந்து எந்த உதவியையும் பெறாமல் தனிநபராக சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறேன்.
சிவசேனா
வால் முன்னாள் எம்.பி.யான ஒருவர் (கிரித் சோமையா) கட்சியை களங்கப்படுத்தி வருகிறார்.

நான், அனில் பரப், ரவீந்திர வாய்க்கர் போன்றவர்கள் அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு முகமைகளினால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பதை சிவசேனா தொண்டர்கள் உணர மீண்டும் பிரதமர் மோடியுடன் கைகோர்ப்பது நல்லது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தற்போதும் அவர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பிரதாப் சர்நாயக்கின் கடிதம் குறித்து கிரித் சோமையா எம்.பி. கூறுகையில், "சிவசேனா எம்.எல்.ஏ. ஜெயிலை பற்றி கவலைப்படுகிறார் என்பது போல தெரிகிறது. எனவே அவர் பா.ஜனதா, பிரதமர் மோடியுடன் கைகோர்க்குமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவசேனாவை சேர்ந்த ஊழல் தலைவர்கள் பிரதாப் சர்நாயக், அனில் பரப், ரவீந்திர வாய்க்கர் அனைவரும் ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள்" என்றார்.

இதேபோல பிரதாப் சர்நாயக்கை 100 நாட்களாக காணவில்லை என கிரித் சோமையா தானே போலீசில் புகார் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதாப் சர்நாயக்கின் கடிதம் சிவசேனா கட்சியின் உள்விவகாரம் என காங்கிரஸ் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

இதேபோல மராட்டியத்தில் எந்த பகுதியிலும் சிவசேனாவினர் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கப்படவில்லை, பிரதாப் சர்நாயக் தொகுதியில் அதுபோல எதுவும் நடந்து உள்ளதா என பார்க்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரதாப் சர்நாயக்கின் கடிதம் குறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ‘‘பிரதாப் சர்நாயக் தற்போது கூறுவதை தான், கடந்த 18 மாதங்களாக சொல்லி கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்ததால் தான் சிவசேனா அரசியலில் வளர்ந்தது. தற்போது நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சிகளுடன் சென்றுவிட்டீர்கள். உத்தவ் தாக்கரே சர்நாயக்கின் கடிதம் குறித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News