செய்திகள்
மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு... வெளிநபர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
மகாராஷ்டிராவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 22ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா மூன்றாவது அலை அச்சம் காரணமாக, மே 15ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காக ஜூன் 1ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 46,781 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 816 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 52.26 லட்சமாகவும், உயிரிழப்பு 78007 ஆகவும் உள்ளது.