செய்திகள்
காங்கிரஸ்

அசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும் காங்கிரஸ்

Published On 2021-02-27 06:56 GMT   |   Update On 2021-02-27 06:56 GMT
தருண் கோகாய் அளவுக்கு புகழ் பெற்ற தலைவர்கள் யாரும் அசாமில் காங்கிரஸ் கட்சியில் இல்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கவுகாத்தி:

அசாமில் தற்போது சர்பானந்தா சோனாவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

அசாமில் மார்ச் 27-ந் தேதி முதல் கட்டதேர்தலும், ஏப்ரல் 1-ந் தேதி 2-வது கட்ட தேர்தலும். ஏப்ரல் 6-ந் தேதி 3-வது கட்ட தேர்தலும் நடக்கிறது. மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

அசாமில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் ஏற்கனவே வேலைகளை தொடங்கிவிட்டன. அங்கு பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரமும் அங்கு ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஜனவரி 2-ந் தேதி சிவசாகர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து அசாமை பாதுகாப்போம் பிரசாரம் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் இந்த தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியும், ஏற்கனவே சிவசாகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் அறிக்கை தயார் செய்ய மாநிலத்தில் உள்ள சிவில் சமூக வியூகங்கள் போன்ற அனைத்து தரப்பினரிடமும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே கருத்து கேட்டுள்ளனர்.

அசாமில் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாகவே விளங்குகிறது. தருண் கோகாய் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரும் செல்வாக்கு மிக்கவர். 15 ஆண்டுகள் இவர் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி அவர் மரணம் அடைந்தார். அவர் இல்லாமல் இந்த சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கிறது.

தருண் கோகாய் அளவுக்கு புகழ் பெற்ற தலைவர்கள் யாரும் அசாமில் காங்கிரஸ் கட்சியில் இல்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அசாமில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அசாம் பிரசாரத்துக்கு ஒரு தலைமைத்துவத்தை அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அசாமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

Tags:    

Similar News