செய்திகள்
கோப்புப்படம்

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பேரன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு

Published On 2021-01-07 06:17 IST   |   Update On 2021-01-07 06:17:00 IST
முன்னாள் பிரதமர், லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் சஞ்சய்நாத் சிங் தலைமையிலான அனைத்திந்திய விவசாய சங்கம், புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து உள்ளது.
புதுடெல்லி:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. அதேநேரம் இந்த சட்டங்களுக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில் முன்னாள் பிரதமரும், விவசாயிகளின் நல்வாழ்வுக்காக உழைத்தவருமான லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் சஞ்சய்நாத் சிங் தலைமையிலான அனைத்திந்திய விவசாய சங்கமும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து உள்ளது.

இது குறித்து சஞ்சய் நாத் சிங் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள், இந்திய விவசாயத்துறைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளன. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போதும் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்புகள் அமலில் இருக்கும்போது, அது குறித்து விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அச்சத்தை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். மலிவான அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய சஞ்சய்நாத் சிங், புதிய சட்டங்கள் கொண்டு வந்தது மத்திய அரசின் துணிச்சலான முடிவு எனவும் பாராட்டியுள்ளார்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு சில பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு சஞ்சய் நாத் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக வேளாண் மந்திரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Similar News