செய்திகள்
பிரதமர் மோடி

புதிய வேளாண் சட்டங்கள் பற்றி விளக்கம்- 9 கோடி விவசாயிகளிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்

Published On 2020-12-25 12:35 IST   |   Update On 2020-12-25 12:35:00 IST
பிரதமர் மோடி தனது உரையில் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், மத்திய அரசின் உதவி திட்டங்கள், விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து விரிவாக பேசினார்.
புதுடெல்லி:

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் கொராக்பூரில் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலிருந்து விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் 7-வது தவணை தொகை இன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 9 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடுத்த தவணை பணம் ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி சிறந்த ஆட்சி நிர்வாக தினமாக கொண்டாடி வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வாஜ்பாயின் பிறந்த நாளாகும். இதையொட்டி சிறந்த ஆட்சி நிர்வாக தினம் நிகழ்ச்சி டெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு அடுத்த தவணை தொகை ரூ.18 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கான பொத்தானை அவர் அழுத்தினார். இதையடுத்து நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் மத்தியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் விவசாயிகள் காணொலி மூலம் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி ரூ.18 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி விவசாயிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.



மேலும் அவர் 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதில் விவசாயிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.

அவரது நிகழ்ச்சி நாடு முழுவதும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் அகன்ற திரை மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும் அனைத்து அரசு விவசாய மண்டிகள், மார்க்கெட்டிங் கமிட்டி, விவசாய கூட்டுறவு அலுவல கங்கள் ஆகியவற்றிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அனைத்து மாநிலங்களி லும் பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் உரை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளிலும் சுமார் 6 கோடி விவசாயிகள் கலந்துகொண்டு பிரதமர் உரையை கேட்டனர்.

ஒவ்வொரு இடத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய உதவி திட்டங்கள் பற்றி கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்து பேசினார்கள். நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிரதமர் தனது உரையில் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், மத்திய அரசின் உதவி திட்டங்கள், விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு செய்யப்படும் உதவிகள் போன்றவை பற்றி விரிவாக பேசினார்.

பிரதமர் டெல்லியில் உரையாற்றியபோது மத்திய மந்திரிகளும், கட்சியின் முக்கிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் மெக்ராலிக் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மத்திய மத்திரிகள் பியூஸ் கோயல் ஹாபூரிலும், நிதின் கட்காரி அசாம் மாநிலம் சில்ஜாரிலும், கஜேந்திர செகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலும், ஸ்மிருதிராணி அமேதியில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திறந்த வெளி மைதானத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 ஆயிரம் விவசாயிகள் சுமார் 1000 கட்சி தொண்டர்கள் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், மாநில தலைவர் எல்.முருகன், அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பேசினார்கள். கே.டி.ராகவன், பலராமன், செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மோடி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மோடியின் உரை விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Similar News