செய்திகள்
கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

மருத்துவமனை செல்லும் வழியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

Published On 2020-09-06 18:47 GMT   |   Update On 2020-09-06 18:47 GMT
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா:

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணை அங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவர்கள் நேற்று முன்தினம் மாற்றினர்.

இதற்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் (வயது 29), வண்டியை அரன்முழா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தினார். பின்னர் அந்த இளம்பெண்ணை கொரோனா நோயாளி என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இளம்பெண், மருத்துவமனை சென்றபின் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்து உள்ளார். அவர், உடனே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நவுபல் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைமன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில சுகாதார மந்திரி சைலஜா, இது குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக்கூறிய அவர், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை பணி நீக்கம் செய்து ஆம்புலன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.

இது குறித்து மகளிர் ஆணைய தலைவி ஜோசப்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண் நோயாளிகளுக்கு தனியாக பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் டிரைவர்களை பணிக்கு அமர்த்துமுன் அவர்களது பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆம்புலன்சில் இளம்பெண்ணை தனியாக அனுப்பி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அந்த கட்சியினர், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று பாதித்த இளம்பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News