செய்திகள்
மத்திய அரசு

வங்கிக் கடன் தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது -மத்திய அரசு தகவல்

Published On 2020-09-03 10:02 GMT   |   Update On 2020-09-03 10:02 GMT
ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வங்கிக் கடன் தவணைகளுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: 

ஊரடங்கு காலத்தில் வங்கக் கடன் தவணைகளை வசூலிப்பது 6 மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.

அவர் தனது வாதத்தின்போது, ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வங்கிக் கடன் தவணைக்கான வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

‘மேலும், எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு வெவ்வேறாக உள்ளது. கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளே நமது நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு.  பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது. பொருளாதாரத்தை புனரமைக்க போதிய திட்டங்கள் தேவை’ என்றும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
Tags:    

Similar News