செய்திகள்
கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன்

கேரள முதல் மந்திரி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்- போலீசார் தடியடி

Published On 2020-08-28 10:21 GMT   |   Update On 2020-08-28 10:27 GMT
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருவனந்தபுரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் மற்றும் கேரள தகவல் தொடர்பு துறை செயலராக பதவியில் இருந்த எம். சிவசங்கர் என்பவர்தான் ஸ்வப்னாவை பதவியில் நியமனம் செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து அதிரடியாக சிவசங்கர் அவரது இரு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

இதுவரை இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் வயநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை அந்த இடத்தில் இருந்து கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News