செய்திகள்
கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக படுக்கைகள்

ஒரு வாரத்திற்குள் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க டெல்லி அரசு உத்தரவு

Published On 2020-06-14 11:56 IST   |   Update On 2020-06-14 11:56:00 IST
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக அடுத்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில், கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் மராட்டியம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.

டெல்லியில் 38 ஆயிரத்து 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் 14 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை முடிந்து சென்று உள்ளனர். 22,742 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,271 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 20 ஆயிரம் புதிய படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்காக ஓட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகளும், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகளும் மற்றும் நர்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகளும் தயார் செய்யும்படி டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

Similar News