செய்திகள்
தெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா?: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்
தெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளன. இன்று ஒரே நாளில் 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடுமுழுவதும் ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே துறையும் முன்பதிவை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் ஜூன் 2-ந்தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘‘ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பரிந்துரை செய்தார். ஜூன் 3-ந்தேதி வரை இந்தியா ஊரடங்கு உத்தரை நீட்டித்தால் நன்றாக இருக்கும் என பிசிஜி கொடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டினார். இதுவரை நாங்கள் நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கவில்லை’’ என்றார்.