செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் பிரதமர் மோடியின் மனைவி?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி கலந்து கொண்டதாக தகவல் வைரலாகியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.
டிசம்பர் 15, 2019 முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெரும்பாலும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதுபோன்ற போராட்டங்களில் நரேந்திர மோடியின் மனைவியும் கலந்து கொண்டதாக சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் பிப்ரவரி 13, 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனுடன் வெளியான செய்தி தொகுப்பில், "பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்" எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.