செய்திகள்
தியோரியா (வரைபடம்)

திறந்தவெளியில் மலம் கழித்த விவகாரம்- சிறுவனின் தந்தையை அடித்து உதைத்து காதை கடித்த கவுன்சிலர்

Published On 2019-11-25 16:00 IST   |   Update On 2019-11-25 16:00:00 IST
திறந்தவெளியில் மலம் கழித்த சிறுவனின் தந்தையை அப்பகுதி கவுன்சிலர் ஒருவர் தாக்கியதுடன் அவரது காதை கடித்ததாக கூறப்படுகிறது.
தியோரியா:

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா நகரின், கிராம் கவுர் கோதி பகுதியைச் சேர்ந்தவர் நந்த கிஷோர். இவரது மகன் நேற்று மாலை அப்பகுதியில் மருத்துவமனை அருகே உள்ள சாலையோர வாய்க்காலில் மலம் கழித்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் அஷுடோஷ் திவாரி, தனது உதவியாளர்களுடன் அங்கு சென்று, திறந்த வெளியில் இப்படி மலம் கழிக்கக் கூடாது என சிறுவனை கண்டித்துள்ளார். 

இது தொடர்பாக சிறுவனின் தந்தை கிஷோருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவனின் தந்தையை கவுன்சிலர் அடித்து உதைத்ததுடன் அவரது காதை கடித்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கிஷோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த கிஷோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Similar News