செய்திகள்
விமானம் சறுக்கியதால் சேதமடைந்த ஓடுபாதை

மும்பை விமான நிலைய பிரதான ஓடுபாதை மூடப்பட்டது- சரிசெய்ய 48 மணி நேரம் ஆகும்

Published On 2019-07-02 08:32 GMT   |   Update On 2019-07-02 10:27 GMT
விமானம் சறுக்கியதால் சேதமடைந்த மும்பை விமான நிலைய பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. அது செயல்பாட்டிற்கு வர 48 மணி நேரம் ஆகலாம்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியபோது, ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானம் சறுக்கிக்கொண்டு சென்றதால் ஓடுதளம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே, பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு, இரண்டாம் நிலை ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விமான சேவை மிகவும்  தாமதம் ஆகிறது. 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 55 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெரிய விமானங்களை இயக்கும் அளவுக்கு இரண்டாம் நிலை ஓடுபாதை போதிய அகலம் இல்லாததால் சர்வதேச விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான ஓடுபாதை சரிசெய்யப்பட்டால்தான் அந்த விமானங்களை இயக்க முடியும். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் மழை நீடிப்பதால், சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வர இன்னும் 48 மணி நேரம் வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News