செய்திகள்
மாதிரி படம்

விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது

Published On 2019-07-02 12:34 IST   |   Update On 2019-07-02 15:26:00 IST
திருமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி:

திருமலை சேஷாசல வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டுபன்றிகள், மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் வனப்பகுதியில் இருந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு வரும் போது பக்தர்களை தாக்குகின்றன. கடந்த மாதம் சிறுத்தை தாக்கி 2 பெண்கள் காயமடைந்தனர். இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகிறது.

இதைதொடர்ந்து மலைபாதை மற்றும் நடைபாதையில் அதிநவீன சென்சார் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை கண்டறிய வனப்பகுதியில் 60 முதல் 70 கேமராக்கள் உள்ளன. மேலும் கூடுதலாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சென்சார் கேமராக்களை மலை பாதையிலும், நடைபாதை வழித்தடத்திலும் பொருத்த உள்ளனர். இதன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

முதல்கட்டமாக 6 கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது, இவற்றின் பணி திறனை அறிந்த பின் மேலும் கூடுதலாக 10 முதல் 15 கேமராக்களை பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Similar News