செய்திகள்

மாலத்தீவு பயணத்துக்குப் பிறகு மோடி இலங்கை செல்கிறார்

Published On 2019-05-31 11:53 IST   |   Update On 2019-05-31 11:53:00 IST
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதும் முதன் முதலில் அண்டை நாட்டுக்குத்தான் சென்றார். அதே போன்று இந்த தடவையும் பக்கத்து நாட்டுக்கே செல்ல வேண்டும் என்ற முடிவின்படி அவர் மாலத்தீவு செல்கிறார்.

சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. அது தேர்தலில் ஓய்ந்த பிறகு தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் சிலமணி நேரம் மட்டுமே மோடி தங்கி இருப்பார்.

அப்போது அவர் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே இருவரையும் சந்தித்து பேசுவார். இது தவிர இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார்.


இலங்கையில் சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து சுமார் 250 பேர்களை கொன்று குவித்தனர். இந்த கொடூரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குண்டு வெடிப்பு நடந்த ஏதாவது ஒரு இடத்துக்கு மோடி செல்வார் என்று தெரிகிறது.

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய விசாரணை குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். மோடியின் வருகைக்கு முன்னதாக அவர்கள் தங்களது விசாரணையை முடிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News