செய்திகள்

பாராளுமன்ற 5ம் கட்ட தேர்தல்- 10 மணி வரை 12.65 சதவீத வாக்குப்பதிவு

Published On 2019-05-06 10:56 IST   |   Update On 2019-05-06 10:56:00 IST
பாராளுமன்ற ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் 7 மாநிலங்களில், காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. #LokSabhaElections2019 #VoterTurnout
புதுடெல்லி:

பாராளுமன்ற 5-வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தன் மனைவி காயத்ரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய மந்திரியும் ஹசாரியாபாக் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்டில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோ மாண்டிசோடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 11.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜார்க்கண்டில் 13.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கோடர்மா தொகுதியில் 11.94 சதவீதம், ராஞ்சியில் 15.69 சதவீதம், குந்தியில் 12.85 சதவீதம், ஹசாரியாபாத்தில் 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

பீகார் மாநிலத்தில் 11.51 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 9.82 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 12.97 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 8.4 சதவீதமும், ராஜஸ்தானில் 13.24 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 0.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பீகாரில் 11.51 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 1.36 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 13.18 சதவீதம், ராஜஸ்தானில் 14 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 9.85 சதவீதம், மேற்கு வங்கத்தில் 16.56 சதவீதம், ஜார்க்கண்டில் 13.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.  #LokSabhaElections2019 #VoterTurnout

Similar News