செய்திகள்
குஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி
குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.
தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu